வாஷிங்டனில் அதிர்ச்சி: அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு - பத்திரமாக வெளியேற்றம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வருடாந்திர பத்திரிகையாளர் விருந்து நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டிரம்ப், முதற்பெண்மணி மெலனியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன் பாதுகாப்புப் படையினர் அதிபரை உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம்
சம்பவம் நடந்த விதம்
சுமார் 2,600 பேர் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில், நான்கு முதல் ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக "துப்பாக்கிச் சூடு" என்று கத்த, அரங்கத்தில் இருந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மேஜைகளின் அடியில் பதுங்கினர். இதற்கிடையில், அதிபரின் மேடைக்குத் தந்திரோபாயக் குழுவினர் விரைந்து சென்று அவரைச் சூழந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். சந்தேகத்திற்குரிய நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாக காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
டிரம்ப்
டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு
சம்பவத்திற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். "வாஷிங்டனில் இது ஒரு விசித்திரமான இரவு. ரகசியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மிக விரைவாகவும் வீரத்துடனும் செயல்பட்டு சிறப்பாகப் பணியாற்றினர். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியைத் தொடர நான் பரிந்துரைத்துள்ளேன், ஆனால் சட்ட அமலாக்க அமைப்புகளின் இறுதி முடிவை நாங்கள் மதிப்போம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு
வரலாற்றுத் தொடர்பு
இந்தச் சம்பவம் நடந்த அதே வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில்தான், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 30, 1981 அன்று முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்ற நபரால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ரீகன் காயமடைந்தார். தற்போதைய நிகழ்வு அமெரிக்க அரசியலில் மீண்டும் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் அதிக அளவில் கூடியிருந்த இடத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவின் உயர் மட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.