எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது. ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரின் நிறம் தொடர்ந்து கருமை நிறமாக மாறி வருவதால், இந்த ஆபத்து மிக அருகில் உள்ளது எனச் சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்கம்
ஏரியின் நீர்மட்டம் மற்றும் உடைந்தால் ஏற்படும் தாக்கம்
சீனாவின் சொச்சென் ஆறு மற்றும் நேபாளத்தின் புரெபு ஆறு சந்திக்கும் பகுதியில் இடிபாடுகளால் இந்த இயற்கை ஏரி உருவாகியுள்ளது.
சீன நீர்வள அமைச்சகத்தின்படி, இந்த ஏரியில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது.
இந்த ஏரி உடைந்தால், ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 500 கன மீட்டர் தண்ணீர் மட்டுமே பாயும் என்றும், இது ஆற்றின் கரைகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும் என்பதால் ஆற்றுப் படுகைக்கு வெளியே பெரும் சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சீனா கணித்துள்ளது.
எச்சரிக்கை
ட்ரோன்கள் மூலம் தொடர் கண்காணிப்பும் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கையும்
இந்த ஏரியில் அடுத்த சில நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் சேர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள சீன அரசு, ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் ஏரியை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
லெண்டே கோலா மற்றும் திரிசூலி ஆற்றங்கரையோரத்தில் வாழும் நேபாள மக்கள் அனைவரும் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ள அபாயம் தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இயற்கை
இயற்கையாகவே வழியத் தொடங்கிய ஏரி நீர்
நேபாளத்தின் சித்வான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்து பெருமளவில் இல்லை என்ற போதிலும், வெள்ளப் பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை.
தற்போது ஏரியின் நீர் லெண்டே கோலா மற்றும் திரிசூலி ஆறுகளில் மெதுவாக வழியத் தொடங்கியுள்ளதால், தற்போதைக்கு இதன் மூலம் ஏற்படும் ஆபத்து கட்டுக்குள் இருப்பதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.