கூகுள், மெட்டா, டிக்டாக்கிற்கு ஆஸ்திரேலியா அதிரடி செக்! செய்திகளுக்கு பணம் கொடுக்காவிட்டால் ஆபத்து
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு அதிரடியான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்த ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பணம் வழங்க வேண்டும்; தவறினால், அவற்றின் வருவாயில் 2.25 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். "பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நமது ஊடகவியலாளர்களின் உழைப்பால் பலன் பெறுகின்றன, ஆனால் அதற்கான சரியான பங்களிப்பை வழங்குவதில்லை. இதனை மாற்றவே இந்த நடவடிக்கை."
வரி
நிூஸ் பார்கெய்னிங் இன்சென்டிவ்
ஆஸ்திரேலிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இந்த புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தினார். இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர் ஊடகங்களுடன் வணிக ரீதியான ஒப்பந்தங்களைச் செய்யத் தவறினால், ஆஸ்திரேலியாவில் அவை ஈட்டும் வருவாயில் 2.25% வரியாக வசூலிக்கப்படும். ஆஸ்திரேலியாவில் 250 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் மற்றும் குறிப்பிடத்தக்கப் பயனர் எண்ணிக்கையை கொண்ட (5 மில்லியன் - 10 மில்லியன்) பெரிய நிறுவனங்களுக்கு இது பொருந்தும். வசூலிக்கப்படும் வரிப் பணம் நேரடியாக ஆஸ்திரேலிய பத்திரிகைத் துறையை வலுப்படுத்தவும், பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஊடக நிறுவனங்களுக்குப் பகிர்ந்து வழங்கவும் பயன்படுத்தப்படும்.
எதிர்ப்பு
தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பு
இந்த புதிய வரி விதிப்பை மெட்டா மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. மெட்டா: "செய்தி நிறுவனங்கள் தானாக முன்வந்தே எங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்கின்றன. அவர்களிடமிருந்து நாங்கள் எதையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கவில்லை. இந்தச் சட்டம் ஒரு தவறான முன்னுதாரணம்" என்று தெரிவித்துள்ளது. கூகுள்: இந்தச் சட்டத்தின் தேவை குறித்துத் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், இது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளது.