இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு
நிறுத்தப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு, டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் சிக்கலை எதிர்கொண்டார். அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணை நடத்த வேண்டும் என வீரர்கள் பலமுறை போராட்டம் நடத்திய நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகம் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய வுஷூ சங்கத்தின் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா தலைமையிலான குழு அதன் நிர்வாகத்தை கவனிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்தது.
பலமுறை நிறுத்தப்பட்ட தேர்தல்
பலமுறை தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடத்த முடியாமல் போன நிலையில், கடைசியாக ஆகஸ்ட் 12 அன்று தேர்தல் நடத்தப்படும் என கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் கூறி மல்யுத்த அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் தடையை ரத்து செய்து, தேர்தல் விதிகளில் மாற்றம் செய்வது குறித்து டிசம்பர் 8க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதனால் டிசம்பர் 8 அல்லது அதற்குப் பிறகு தேர்தல் குறித்த வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.