உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 5) 17 வயதே ஆன இளம் வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். முன்னதாக, இந்திய மகளிர் அணி காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்திருந்த நிலையில், தற்போது உலக சாம்பியன்ஷிப் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அதிதி கோபிசந்த் சுவாமி படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெக்கேராவை எதிர்கொண்ட அதிதி கோபிசந்த் சுவாமி, 149-147 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். முன்னதாக, அதிதி அரையிறுதியில் சக இந்திய வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னத்தை 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
வெண்கலம் வென்ற ஜோதி சுரேகா வென்னம்
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் அதிதி கோபிசந்த் சுவாமியிடம் தோல்வியைத் தழுவிய ஜோதி சுரேகா வென்னம் வெண்கலத்திற்கான போட்டியில் துருக்கியின் இபெக் டோம்ருக்கை எதிர்கொண்டார். இதில், ஜோதி சுரேகா வென்னம் எந்தவொரு புள்ளியையும் இழக்காமல் 150 புள்ளிகள் எடுத்து எளிதாக வெண்கல பதக்கத்தை வென்றார். இதன் மூலம் மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்தியா 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.