Loading...
முதல் இந்தியர்! சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்; முழு விபரம்
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்

முதல் இந்தியர்! சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
01:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய செஸ் உலகின் அடையாளமும், ஐந்து முறை உலக சாம்பியனுமான கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதுவரை FIDE அமைப்பின் தலைவராக இருந்த ரஷ்யாவை சேர்ந்த அர்காடி துவார்கோவிச் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, சர்வதேச செஸ் அமைப்பின் சாசன விதிகளின்படி, அதன் துணைத் தலைவராக இருந்த விஸ்வநாதன் ஆனந்த் இடைக்காலத் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தடை விதிப்பு

அர்காடி துவார்கோவிச் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது ஏன்?

ரஷ்யா - உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்ய அரசோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய தடைகளின் பட்டியலில் அர்காடி துவார்கோவிச்சின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2018 வரை ரஷ்யாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றிய இவர், தனது பிடே தலைவர் பதவியைப் பயன்படுத்தி ரஷ்ய அரசின் நலன்களை ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் செஸ் போட்டிகளை நடத்தியது மற்றும் கிரிமியா ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளித்தது போன்ற காரணங்களாலும் இவர் மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஸ்வநாதன் ஆனந்த்

தொடர் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ஆனந்த் உறுதிபூண்டுள்ளார்

புதிய பொறுப்பை ஏற்ற பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த், FIDE அமைப்பின் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார்.

அர்காடி துவார்கோவிச்சின் திறம்பட வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்த அவர், சர்வதேசச் செஸ் குடும்பத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதும், உலகளவில் செஸ் விளையாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதுமே தங்களின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச செஸ் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படப் போவதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வளர்ச்சி

2022 சென்னை செஸ் ஒலிம்பியாட் மற்றும் ஆனந்தின் வளர்ச்சி

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிடே அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்த துவார்கோவிச், 2022ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது விஸ்வநாதன் ஆனந்த் அவரை முழுமையாக ஆதரித்தார்.

அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க 44வது மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் தொடரின் போது நடைபெற்ற FIDE காங்கிரஸில், விஸ்வநாதன் ஆனந்த் FIDE அமைப்பின் துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள சர்வதேச அரசியல் மாற்றங்களால் அவர் மிக உயரிய இடத்திற்கு சென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியாவுக்கு மகுடம்

இந்திய செஸ் வரலாற்றுக்குக் கிடைத்த மற்றொரு மகுடம்

உலகளவில் செஸ் விளையாட்டின் உச்ச அமைப்பான FIDEஐ வழிநடத்தும் முதல் இந்தியர் என்ற பெருமையை விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுள்ளார்.

இந்திய செஸ் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து மாபெரும் சாதனைகளைப் படைத்து வரும் காலகட்டத்தில், நிர்வாக ரீதியாகவும் இந்தியாவை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் உலக செஸ் அமைப்பை வழிநடத்துவது இந்திய செஸ் வரலாற்றுக்குக் கிடைத்த மற்றொரு மிக முக்கிய மகுடமாகக் கருதப்படுகிறது.

விளையாட்டு ஆர்வலர்கள் விஸ்வநாதன் ஆனந்திற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT