Loading...
விராட் கோலி - ரோஹித் சர்மா புதிய உலக சாதனை: சச்சின் - டிராவிட் சாதனையை முறியடித்து அசத்தல்
சச்சின் - டிராவிட் சாதனையை முறியடித்து விராட் கோலி - ரோஹித் ஷர்மா புதிய சாதனை

விராட் கோலி - ரோஹித் சர்மா புதிய உலக சாதனை: சச்சின் - டிராவிட் சாதனையை முறியடித்து அசத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2026
08:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக விளங்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை படைத்துள்ளனர். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாக 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று மைல்கல்லை இவர்கள் எட்டியுள்ளனர். இந்திய அணியில் ஆண்டுதோறும் பல இளம் திறமைகள் உருவாகி வரும் நிலையிலும், இவர்களின் இந்த சாதனை இவர்களது அசாத்திய திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது.

சச்சின் - டிராவிட்

சச்சின் - டிராவிட் ஜோடியின் சாதனையை முறியடிப்பு

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி ஒன்றாக இணைந்து 391 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

தற்பொழுது அந்த நீண்ட கால சாதனையை ரோஹித் மற்றும் கோலி இணை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது.

இதன் மூலம் உலக அளவில் ஒன்றாக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இந்த ஜோடி 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்பட்டியலில் இலங்கையின் ஜெயவர்த்தனே - சங்ககாரா ஜோடி 550 போட்டிகளுடன் முதலிடத்திலும், ஜெயவர்த்தனே - தில்ஷான் ஜோடி 426 போட்டிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.

70% ஆட்டம்

தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் 70% ஒன்றாக ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான இந்த 3வது ஒருநாள் போட்டி விராட் கோலிக்கு 561வது சர்வதேசப் போட்டியாகவும், ரோஹித் ஷர்மாவுக்கு 513வது சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது.

இதன் மூலம் இவ்விரு வீரர்களும் தங்களது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான போட்டிகளைத் தங்களுக்குள் சக வீரர்களாக ஒன்றாக இணைந்து விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டின் நவீன சகாப்தத்தை வழிநடத்தி வரும் இந்த அதிரடி ஜோடி, தற்பொழுது வரை உலக கிரிக்கெட் அரங்கில் பல வெற்றிகளை இந்திய அணிக்குத் தேடித்தந்துள்ளது.

ADVERTISEMENT

ரன் குவிப்பு

ஒன்றாக விளையாடிய போட்டிகளில் ரன் குவிப்பு விபரம்

இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடிய இந்த 400 சர்வதேச போட்டிகளில் ரன்களை குவித்துள்ளனர்.

ரோஹித் ஷர்மா 43.6 என்ற சராசரியோடு 44 சதங்கள் உட்பட மொத்தம் 16,917 ரன்களை விளாசியுள்ளார்.

மறுபுறம், ரன் மிஷின் விராட் கோலி 54.3 என்ற மிகச் சிறந்த சராசரியோடு 56 சதங்கள் உட்பட மொத்தம் 19,594 ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளார்.

இந்த ரன் குவிப்பு விபரங்களே இவர்களின் பார்ட்னர்ஷிப் எந்தளவிற்குப் பலமாக இருந்துள்ளது என்பதைப் பறைசாற்றுகிறது.

ADVERTISEMENT

எதிர்காலம்

ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்த சர்ச்சை

இந்த சாதனையால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும், இவ்விரு மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து தற்பொழுது பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான தேர்வு குழுவின் திட்டத்தில் ரோஹித் ஷர்மா இல்லை என்றும், இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையே, விராட் கோலி தனது தற்போதைய ஃபார்மை இழந்தால் அவருக்கும் இதே நிலைதான் ஏற்படும் என முன்னாள் வீரர் அஷ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT