அவுட் கொடுக்கலாமா கூடாதா? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்; வைரலாகும் புகைப்படம்
மெல்போர்ன் கிளப் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கினிந்தெரா கிரிக்கெட் கிளப்புக்கும் வெஸ்ட் டிஸ்ட்ரிக்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் பந்து ஸ்டம்பில் பட்டதில், நடு ஸ்டம்ப் சாய்ந்தது. ஆனால் வேரோடு பிடுங்கி வீசப்படவில்லை. மேலும் பெயிலும் கீழே விழாமல் ஸ்டம்பின் மீது அப்படியே இருந்தது. களத்தில் இருந்த அம்பயர் நாட் அவுட் கொடுத்து வீரரை விளையாட வைத்தார். இது விவாதத்தை ஏற்படுத்தினாலும், எம்சிசி கிரிக்கெட் விதிப்படி ஒரு பெயில் முழுவதுமாக அகற்றப்பட்டாலோ, அல்லது ஒரு ஸ்டம்பை மைதானத்திற்கு வெளியே விழவைத்தாலோ மட்டும்தான் அவுட் கொடுக்க வேண்டும். இந்த விதியின் கீழ் நாட்அவுட் கொடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.