"சிஎஸ்கேவில் விளையாடியது மன ரீதியாகப் பாதித்தது!" ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் உடைத்த ரகசியம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐபிஎல் ஓய்வை அறிவித்ததன் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான காரணங்களை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். தனது ஆஷ் கி பாத் யூடியூப் சேனலில் பேசிய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தாய் வீடான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்குத் திரும்பியது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக, மிகுந்த மன உளைச்சலையும் வலியையுமே கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். "உண்மையைச் சொல்லப்போனால் என்னால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடியிருக்க முடியும். ஆனால், மற்றவர்களை நிர்வகித்துக்கொண்டு விளையாடுவதற்கான மனவலிமை என்னிடம் இல்லை. அந்தச் சூழல் என்னை மிகவும் பாதித்தது." என்று அஸ்வின் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
ஏமாற்றமான சீசன்
சிஎஸ்கேவின் ஏமாற்றமான சீசனும் அஸ்வினின் முடிவும்
கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 9.75 கோடி ரூபாய்க்கு அஸ்வினை சிஎஸ்கே வாங்கியபோது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தோனி மற்றும் ஜடேஜாவுடன் அஸ்வின் இணைந்தது ஒரு மெகா கூட்டணியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் அஸ்வினால் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 9 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து 'உடன் ஸ்பூன்' (Wooden Spoon) வாங்கியது அஸ்வினை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் ஓய்வு பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 10 கோடி ரூபாய் மிச்சமானதாகவும், அதை வைத்து அவர்கள் ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிருப்தி
சென்னை அணியின் பந்துவீச்சு வியூகங்கள் மீது கடும் அதிர்ப்தி
தனது ஓய்வு குறித்துப் பேசிய அஸ்வின், ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் சிஎஸ்கே கையாண்ட பந்துவீச்சு முறைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். குறிப்பாக, ஜேமி ஓவர்டன் போன்ற உயரமான வேகப்பந்து வீச்சாளரை வைட் யார்க்கர் வீசச் சொன்னது முட்டாள்தனமானது என்று அவர் சாடியுள்ளார். "ஓவர்டனின் பலம் டெஸ்ட் போட்டிகளில் வீசுவது போன்ற ஹார்ட் லென்த் பந்துவீச்சுதான். டிம் டேவிட் போன்ற அதிரடி ஆட்டக்காரருக்கு எதிராக அவருக்குத் தெரியாத வைட் யார்க்கரை வீசச் சொன்னால் எப்படி வெற்றி கிடைக்கும்? பத்தாம் வகுப்பு மாணவனிடம் போய் ஃபூரியர் சீரிஸ் (Fourier series) கணக்கைக் கேட்டால் அவன் என்ன செய்வான்?" என்று அஸ்வின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல்
ஐபிஎல் வரலாற்றில் அஸ்வினின் அழியாத முத்திரை
அஸ்வின் தனது ஐபிஎல் பயணத்தை ஒரு ஜாம்பவானாகவே நிறைவு செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 187 விக்கெட்டுகளுடன் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பல அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் உட்பட 833 ரன்களை எடுத்துள்ள அஸ்வின், தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே முடித்துக் கொண்டது ஒரு மனநிறைவைத் தந்தாலும், அந்த கடைசி சீசனில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஆறாத வடுவாகவே மாறியுள்ளன.