இரட்டை சதத்தை தொடர்ந்து மேலும் ஒரு சதம்; கவுண்டி கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா ரன் வேட்டை
இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கோப்பையில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, முந்தைய இன்னிங்சில் இரட்டை சதத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சதம் அடித்தார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடந்த இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டர்ஹாம் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். 50 ஓவர்களைக் கொண்ட லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியான இதில், டர்ஹாம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 198 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நார்தாம்ப்டன்ஷையர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார்.
சோமர்செட் அணிக்கு எதிராக இரட்டை சாதம்
முன்னதாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த போட்டியில் சோமர்செட் அணிக்கு எதிராக விளையாடிய நார்தாம்ப்டன்ஷையர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா, 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்தார். இதன் மூலம் கவுண்டி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இந்நிலையில், தற்போதைய ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் ப்ரித்வி ஷா, மூன்று ஆட்டங்களில் 304 ரன்களுடன் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா நான்கு ஆட்டங்களில் விளையாடி 302 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.