மகளிர் கிரிக்கெட் : நியூசிலாந்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்
திங்கட்கிழமை (டிச.18) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுவாகும். மேலும் பாகிஸ்தான் விளையாடிய கடைசி 17 ஒருநாள் போட்டிகளில் பெறும் இரண்டாவது வெற்றியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆனால் ஒருநாள் தொடர் அதற்கு நேர் மாறாக அமைந்து முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்ற பாகிஸ்தான் தற்போது மூன்றாவது போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து மகளிர் 3வது ODI ஹைலைட்ஸ்
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் அமெலியா கெர் 77 ரன்களும் மேடி கிரீன் 65 ரன்களும் எடுத்த நிலையில், நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. 252 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. இதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.