முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்று, இலங்கை கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதல் இன்னிங்சில் 312 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 279 ரன்களும் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 461 ரன்கள் குவித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களுடன் இருந்தது. இந்நிலையில், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூலை 20) மேலும் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
போட்டியில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்
ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக வாசிம் அக்ரம் (414), முகமது ஆமிர் (119) ஆகியோர் மட்டுமே இதை எட்டியுள்ளனர். ஏஞ்சலோ மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 1,500 (1,529) டெஸ்ட் ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை பேட்டர் ஆனார். இதற்கு முன்னர் குமார் சங்கக்கார (2,911) மற்றும் மஹேல ஜெயவர்தன (1,687) ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். சவுத் ஷகீல் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்ததோடு, இலங்கையில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார்.