இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது காலத்தில் பல்வேறு சாதனைகளின் நாயகனாக வலம் வந்தார். அவரது பல சாதனைகள் இன்னும் கூட முறியடிக்கப்படாமலேயே உள்ளன. அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 1,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை 31 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். 1992இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். அப்போது சச்சினுக்கு வயது 19 வருடம் 216 நாட்கள். மேலும், இந்த போட்டியில் சதமடித்து 270 பந்துகளில் 111 ரன்கள் குவித்ததன் மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
டிராவில் முடிந்த போட்டி
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்த இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜான்டி ரோட்ஸ் 91 ரன்களும், பிரையன் மெக்மில்லன் 98 ரன்களும் எடுத்த நிலையில் இந்திய தரப்பில் மனோஜ் பிரபாகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் சச்சின் சதமடித்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 227 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அனில் கும்ப்ளே 6 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்த நிலையில், ஐந்தாவது நாள் முடிந்து போட்டி டிரா ஆனது.