இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற தினம்
தனது வழக்கத்திற்கு மாறான தலைமைத்துவம் மற்றும் அச்சமற்ற பேட்டிங் மூலம் இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த ஜாம்பவான் எம்எஸ் தோனி, ஆகஸ்ட் 15,2020 அன்று இதேநாளில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். கிரிக்கெட்டில் அவரது அணுகுமுறை எப்படி கணிக்க முடியாததாக இருந்ததோ, அதேபோல் அவரது ஓய்வு அறிவிப்பும் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அறிவித்தார். அப்போது, எம்எஸ் தோனி தனது கடந்தகால கிரிக்கெட் வாழ்க்கையின் புகைப்படங்களை தொகுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவாக வெளியிட்டு ஓய்வை அறிவித்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஓய்வு பெறுவதற்கான அவரது முடிவு, அவரது ஆழமான வேரூன்றிய தேசபக்திக்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு அவர் மீதான அன்பை இன்னும் ஆழமாக்கியது.
கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் சாதனைகள்
எம்எஸ் தோனி 2007 ஆம் ஆண்டு, வெறும் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட இளம் அணியுடன் களமிறங்கி, முதல் டி20 உலகக்கோப்பைப் பெற்றுக் கொடுத்தார். இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புத்தெழுச்சிக்கு வழிவகுத்தது. 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று, கபில்தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு இரண்டாவது ஒருநாள் உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். மேலும் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்லில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்எஸ் தோனி, ஆர்வமிருந்தால் வயது ஒரு தடையல்ல என்ற ஊக்கத்தை வழங்கி வருகிறார்.