LOADING...
அவர்கள் யாருமே கிடையாதாம்; முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு
முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு

அவர்கள் யாருமே கிடையாதாம்; முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 45 வயதான மன்ஹாஸ், ரோஜர் பின்னிக்கு அடுத்த தலைவர் பதவிக்கு முன்னணியில் உள்ளார். தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 28 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பிசிசிஐயின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது. போட்டியின்றி இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிதுன் மன்ஹாஸ் இந்திய தேசிய அணிக்கு விளையாடாவிட்டாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் வீரர் ஆவார். 18 ஆண்டுகால தனது கிரிக்கெட் வாழ்க்கையில், 157 முதல் தர போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 9,700 க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.

பிசிசிஐ

பிசிசிஐ முக்கிய நிர்வாகிகளும் தேர்வு

2007-08 ரஞ்சி டிராபி வென்ற டெல்லி அணியில் ஒரு முக்கிய வீரராகவும், ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளிலும் அவர் விளையாடியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. பிசிசிஐயின் மற்ற முக்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் முடிவாகியுள்ளன. தேவஜித் சைகியா செயலாளராகவும், ராஜீவ் சுக்லா துணைத் தலைவராகவும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பட் பொருளாளராகப் பொறுப்பேற்பார் என்றும், அருண் துமால் ஐபிஎல் தலைவராகத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. சவுரவ் கங்குலி மற்றும் ரோஜர் பின்னிக்கு அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரரை தலைவராக நியமிக்கும் தொடரும் வகையில் இந்த முடிவு உள்ளது.