ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்!
ஐபிஎல் 2023 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஆரஞ்சு தொப்பிக்கான போட்டி இன்னும் தொடர்கிறது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 14 போட்டிகளில் 730 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மான் கில் 680 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலியைத் தவிர, இந்த சீசனில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 639 ரன்களுடன் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த விராட் கோலி தனது ஏழாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்து, ஐபிஎல்லில் அதிக சதமடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இளம் வீரர்களின் அபார செயல்திறன்
ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார். இதில் பவர்பிளேயில் மட்டும் 361 ரன்கள் எடுத்துள்ளார். இது எந்த வீரரும் எட்டாத சாதனையாகும். இதற்கிடையே கொல்கத்தா அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரின்கு சிங் தனது பினிஷிங் திறமைக்காக பேசப்பட்டார். குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் கவர்ந்தார். ரின்கு சிங் இந்த சீசனில் 474 ரன்கள் குவித்தார். இதில் டெத் ஓவர்களில் (17-20) மட்டும் 239ரன்கள் குவித்துள்ளார். இவர்கள் தவிர டெவன் கான்வே, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே ஆகியோரும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.