INDvsAUS : இந்தியாவின் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா; 199 ரன்களுக்கு ஆல் அவுட்
ஞாயிற்றுக்கிழமை (அக்.8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவின் சுழலில் சிக்கி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தப்போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷை டக்கவுட்டாக்கி அந்த அணிக்கு பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். எனினும், அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று அணியை மீட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியாத நிலையில், குல்தீப் சுழலில் 17வது ஓவரில் டேவிட் வார்னர் 41 ரன்களில் அவுட்டானார்.
இந்தியாவுக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
டேவிட் வார்னர் வெளியேறிய நிலையிலும், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஜோடி ரன் எடுக்க முடியாவிட்டாலும், விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடியது. 17வது ஓவரில் 74 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 28வது ஓவரில் 110 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்தை (46) இழந்தது. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய இறுதியில் 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாத மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். முகமது சிராஜ், அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.