இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார். தென்னாப்பிரிக்காவில் தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டி20 தொடரில் டிசம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ள சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டும் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய வீரர்கள்
டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது விராட் கோலி தக்க வைத்துள்ளார். அவர் 60 போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 58 போட்டிகளில் 1985 ரன்களுடன் உள்ளார். இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் 15 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைப்பார். இதற்கிடையே சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் 54 போட்டிகளில் இலக்கை எட்டி பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.