இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : ஷர்துல் தாக்கூருக்கு வலைப்பயிற்சியின்போது காயம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஷர்துல் தாக்கூர் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், காயத்தின் அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வலைப்பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோற்ற நிலையில், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாக்கூர் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 26 ரன்களும், ஒரு விக்கெட்டும் எடுத்தார்.