ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு மாறியதற்கு இதுதான் காரணம்; குஜராத் டைட்டன்ஸ் விளக்கம்
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்புவதற்கான முடிவை எடுத்ததை தொடர்ந்து, ஐபிஎல் 2024 சீசனுக்கான கேப்டனாக ஷுப்மான் கில்லை குஜராத் டைட்டன்ஸ் திங்கள்கிழமை (நவம்பர் 27) நியமித்தது. ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸுக்கு வர்த்தகம் செய்ததன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெளியில் சொல்லப்படாத ஒரு பரிமாற்ற கட்டணத்தைத் தவிர ரூ.15 கோடி பர்ஸ் கூடுதலாக கிடைக்கும். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி, அதற்கான காரணத்தை வெளியிட்டுளளார்.
மும்பைக்கு மாறியது ஹர்திக் பாண்டியாவின் முடிவு
ஐபிஎல் 2022 சீசனில் அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியபோது, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு சென்றார். 2022 சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பட்டம் வென்ற குஜராத், 2023 சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வெளியேறியது குறித்து பேசிய விக்ரம் சோலங்கி, "அவர் தற்போது தனது அசல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவருக்கு சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய இரண்டு சீசன்களில் அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பே காரணம் என தெரிவித்தார்.