ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியாவின் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் வெள்ளி வென்று வரலாறு படைத்தார். மகளிர் தனிநபர் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக் நான்கு சுற்றுகள் முடிவில் 271 க்கு கீழ் 17 புள்ளிகளுடன் போட்டியை முடித்து இரண்டாவது இடம் பிடித்தார். முன்னதாக, முதல் மூன்று சுற்றுகள் முடிவில் முதலிடத்தில் இருந்த அதிதி தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தார். எனினும், கடைசி சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் அதிதி அசோக்கை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த அதிதி அசோக்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் பதக்கம் வென்றதன் மூலம், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆசிய விளையாட்டில் கோல்ஃபில் இந்தியா இதற்கு முன்பு ஆறு பதக்கங்களை வென்றது. ஆனால் அவை அனைத்தும் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களால் பெறப்பட்டது. மேலும், இதற்கு முன்பு கடைசியாக 2010இல் தான் ஆடவர் பிரிவிலும் இந்தியா பதக்கத்தை வென்றிருந்தது. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி கோல்ஃப் விளையாட்டில் இந்தியா பெற்ற முதல் ஆசியப் பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.