ஐபிஎல் 2026: மழையிலும் மேட்ச் நடத்திக் காட்டிய ஹீரோக்கள்! கவுகாத்தி கிரவுண்ட்ஸ்மேன்களுக்கு ₹25 லட்சம் ரிவார்டு
செய்தி முன்னோட்டம்
நடப்பு ஐபிஎல் 2026 தொடரில், கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் அசுர வேகப் பணியால் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இவர்களின் இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, அசாம் கிரிக்கெட் சங்கம் மைதானப் பராமரிப்பாளர்கள் (Curators) மற்றும் ஊழியர்களுக்கு (Groundsmen) ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தேசிய அளவில் இந்த மைதானத்தின் நற்பெயரைக் காப்பாற்றியதற்காக இந்த கௌரவம் வழங்கப்படுவதாக அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மைதான பராமரிப்பாளர்கள்
மழையையும் வென்ற மைதான பராமரிப்பாளர்கள்
கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட மூன்று முக்கியப் போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டன. இருப்பினும், மைதானப் பராமரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டால் மைதானம் விரைவாகத் தயார் செய்யப்பட்டு, போட்டிகள் தொய்வின்றி நடைபெற்றன. "மிகவும் சவாலான காலநிலையிலும் மைதானத்தைத் தரமான முறையில் பராமரித்து, போட்டிகள் சுமூகமாக நடைபெற இவர்கள் முதுகெலும்பாக இருந்தனர்." என்று அசாம் கிரிக்கெட் சங்கம் தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
புள்ளிப்பட்டியல்
முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக்கின் அபார கேப்டன்சி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, இந்த ஐபிஎல் 2026 தொடர் அவர்களுக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. ரியான் பராக் தலைமையில் களம் கண்டுள்ள ராஜஸ்தான் அணி, இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுவது ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்
தனது வெற்றியைத் தொடரும் நோக்கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று (ஏப்ரல் 13) நடைபெறும் இந்த 21வது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. தொடர் வெற்றிகளுடன் வரும் ராஜஸ்தான் அணியை, ஹைதராபாத் அணி தடுத்து நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மறுபுறம், இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்தத் தொடர் இதுவரை ஒரு போராட்டமாகவே உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.