இந்தியாவில் வாட்ஸ்அப் வெப் முடக்கம்! 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 'லாக் அவுட்' ஆவதாக புகார்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி இன்று காலை 9:16 மணி முதல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளது. Downdetector தளத்தின்படி, காலை 11:30 மணியளவில் புகார்கள் உச்சத்தை எட்டின. இதில் 66% புகார்கள் வாட்ஸ்அப் வெப் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.
காரணங்கள்
முடக்கத்திற்காக சந்தேகிக்கப்படும் காரணங்கள்
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய பயனர்கள் இனி வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே 'Logout' செய்யப்படுவார்கள் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறை (DoT) கடந்த 2025 நவம்பரில் வெளியிட்ட உத்தரவின்படி, வாட்ஸ்அப் கணக்கு எந்த சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டதோ, அந்த சிம் கார்டு அதே மொபைலில் இருக்க வேண்டும். சிம் கார்டு மாற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ வாட்ஸ்அப் இயங்காது. இந்த விதிகளை அமல்படுத்த வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு நாளை,பிப்ரவரி 28 முடிவடைகிறது. இந்த மாற்றங்களை செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிரமம்
பயனர்களின் சிரமம்
வாட்ஸ்அப் வெப் மூலம் அலுவலக வேலைகளைச் செய்பவர்கள், இனி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை QR கோடை ஸ்கேன் செய்து மீண்டும் லாகின் செய்ய வேண்டியிருக்கும். இது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என பயனர்கள் எக்ஸ் (X) தளத்தில் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், அரசு வழங்கிய கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், வரும் நாட்களில் இத்தகைய மாற்றங்கள் நிரந்தரமாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.