1.29 லட்சம் பேரின் வேலை காலி! டெக் நிறுவனங்களில் ஆட்குறைப்பு; ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு
செய்தி முன்னோட்டம்
சர்வதேச தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு நிதி ஆதாரங்களை வழிநடத்தவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Layoffs.fyi தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 296 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 1,29,488 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனங்கள்
ஆப்பிள் மற்றும் உபெர் நிறுவனங்களின் முடிவுகள்
ஆப்பிள் நிறுவனம் தனது சிரி மற்றும் விஷன் புரோ பிரிவுகளில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
சிரி அமைப்பைப் புதிய ஏஐ நுட்பத்துடன் மறுசீரமைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உபெர் நிறுவனம் தனது நிறுவனக் கட்டமைப்பை எளிமையாக்கவும், ஏஐ மற்றும் தானியங்கி வாகனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவும் உலகம் முழுவதும் 3,300 ஊழியர்களை (மொத்த ஊழியர்களில் 10%) பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இது கொரோனா பெருந்தொற்றுக்குக்குப் பிறகு அந்நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய ஆட்குறைப்பாகும்.
இந்தியா
இந்தியாவில் பேபால் பாதிப்பு மற்றும் ஆரக்கிள் திட்டங்கள்
நிதிப் பரிவர்த்தனை நிறுவனமான பேபால் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள தனது பிரிவில் 220 ஊழியர்களைப் (இந்தியக் குழுவில் 4%) பணிநீக்கம் செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் உலகளவில் மேலும் 7,000 முதல் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மே 2026 வரையிலான கடந்த 12 மாதங்களில் ஏற்கெனவே 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள், தற்போது ஏஐ உள்கட்டமைப்பில் அதிக நிதி செலுத்தி வருகிறது.
ஏஐ முதலீடு
ஏஐ முதலீடுகளும் எதிர்கால வேலைவாய்ப்பு மாற்றங்களும்
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வெறும் ஆட்களைக் குறைக்கும் முயற்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் வளங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ஆட்டோமேஷன் நோக்கித் திருப்புவதற்கான உத்தியாகும்.
இதன் காரணமாகப் பாரம்பரிய வேலைவாய்ப்புகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள பணிப் பாத்திரங்கள் குறைக்கப்பட்டு, புதிய ஏஐ தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற சிறப்புப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தொழில்நுட்பத் துறையின் இந்த மறுசீரமைப்பு வரும் மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.