India AI Impact Summit 2026: 11 மொழிகளில் பிரதமர் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. முதன்முறையாக, பிரதமரின் உரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் (Real-time) 11 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏஐ தொழில்நுட்பம் எப்படி இணைக்கிறது என்பதற்கான நேரடி சான்றாக அமைந்தது.
சைகை மொழி
உள்ளடக்கிய வளர்ச்சி: சைகை மொழி விளக்கம்
இந்த நிகழ்வின் மிக முக்கியமான அம்சம், பிரதமரின் உரைக்கு ஏஐ மூலம் இயக்கப்பட்ட நேரடி சைகை மொழி விளக்கம் (Live Sign Language Interpretation) வழங்கப்பட்டதாகும். காதுகேளாதோரும் நாட்டின் தலைவரின் உரையை எவ்விதத் தடையுமின்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த வசதி செய்யப்பட்டது. "ஏஐ என்பது இயந்திரங்களை மையமாகக் கொண்டது அல்ல, அது மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்" என்ற பிரதமரின் கருத்திற்கு இது ஒரு வலுவான உதாரணமாக அமைந்தது.
11 மொழிகள்
11 மொழிகளில் நேரடி ஒலிபரப்பு
பிரதமரின் உரையானது ஏஐ மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒடியா மற்றும் அசாமி ஆகிய 11 மொழிகளில் நேரடி மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது தாய்மொழியிலேயே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிந்தது. இது டிஜிட்டல் இந்தியா மற்றும் பாஷினி போன்ற ஏஐ திட்டங்களின் வெற்றியைக் காட்டுகிறது என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உரை
பிரதமர் மோடியின் உரையின் சாராம்சம்
தனது உரையில், இந்தியா ஏஐ புரட்சியில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், அதை முன்னின்று வழிநடத்தும் நாடாக இருப்பதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். "இந்தியா புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதை மிக வேகமாகத் தழுவிக்கொள்கிறது" என்று அவர் குறிப்பிட்டார். ஏஐ தொழில்நுட்பம் பொறுப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய உலகளாவிய பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார்.