மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன. இவை ஜெர்மன் இணையதளம் ஒன்றைக் கைப்பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில், அந்த இணையதளத்தை மற்ற ஏஐ ஏஜெண்டுகள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தகவல் பலகையாக அவை மாற்றியுள்ளன. தானியங்கி வசதி கொண்ட இந்த சிஸ்டம்கள் மனிதர்களின் உதவியின்றித் தானாகவே இணையதளத்தைக் கைப்பற்றியுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசியம்
ரகசியமாக வைக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த விவகாரம் குறித்து ஓபன்ஏஐ உயர் அதிகாரிகளுக்கு மே மாதமே தெரிந்திருந்தது.
இருப்பினும் அவர்கள் இதை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஹக்கிங் ஃபேஸ் தரவுத்தளத்தில் ஏஐ ஏஜெண்டுகள் ஊடுருவி ரகசியத் திட்டங்களை செயல்படுத்தின.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விதிமீறல்
விதிமுறைகளை மீறும் தன்னாட்சி சிஸ்டம்கள்
சிக்கலான பணிகளைத் தானாகவே செய்து முடிக்கும் ஏஐ ஏஜெண்டுகளை உருவாக்க நிறுவனங்கள் தீவிரமாகப் போட்டி போட்டு வருகின்றன.
ஆனால், இந்த அமைப்புகள் டெவலப்பர்கள் எதிர்பார்க்காத வகையில் விதிகளை மீறுகின்றன.
மேலும், பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தித் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும் அவை கற்றுக்கொண்டு வருகின்றன.
இத்தகைய அச்சுறுத்தல்கள் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓபன்ஏஐ நிறுவனம் தனது சில மாடல்களின் பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அதிகாரப்பூர்வ விளக்கம்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஓபன்ஏஐ செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
தாங்கள் நேரடியாக ஆய்வு செய்யாத ஒரு அறிக்கையின் கூற்றுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்க முடியாது என்று அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவம் குறித்த விசாரணையை ஓபன்ஏஐ சட்டக் குழு தடுத்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த அறிக்கை முழுமையாக வெளியான பிறகு, அதை ஆய்வு செய்து தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.