பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏஐ பயிற்சி: மார்ச் 23 முதல் வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தின் கீழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க NIELIT முன்வந்துள்ளது. வரும் மார்ச் 23 முதல் இதற்கான புதிய வகுப்புகள் தொடங்குகின்றன. இந்தத் திட்டம் குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னனுபவம் அல்லது கோடிங் அறிவு தேவையில்லை. இந்த திட்டத்தில் Python மொழியைப் பயன்படுத்தி டேட்டா அன்னோடேஷன் செய்தல், Python மூலம் டேட்டா க்யூரேஷன் செய்வதற்கான அடிப்படை முறைகள், மெஷின் லேர்னிங் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகம், NIELIT லக்னோவில் உள்ள நவீன ஏஐ ஆய்வகத்தில் நேரடிப் பயிற்சிகள் வழங்கப்படும்.
தகுதிகள்
விண்ணப்பிக்கத் தகுதிகள்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல், வணிகவியல், கலை என எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பம் மற்றும் கணினி மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடிப்படை கணினி அறிவு இருப்பது கூடுதல் சிறப்பு என்றாலும் அது கட்டாயமில்லை. ஆர்வமுள்ள மாணவர்கள் NIELIT-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான nielit.gov.in பக்கத்திற்குச் சென்று பதிவு செய்யலாம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
நன்மைகள்
முக்கிய நன்மைகள்
பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு NIELIT வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாணவர்களின் சுயவிவரத்தை மேம்படுத்த உதவும். பள்ளிப் படிப்போடு சேர்ந்து எதிர்காலத்திற்குத் தேவையான நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.