15,000 நடுத்தர அளவிலான கண்டறியப்படாத விண்கற்களால் பூமிக்கு அச்சுறுத்தல்: நாசா
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களை கண்டறிவதில் இன்னும் பெரும் இடைவெளி இருப்பதாக நாசாவின் கோள்களின் பாதுகாப்பு பிரிவு தலைவர் டாக்டர் கெல்லி ஃபாஸ்ட் தெரிவித்துள்ளார். பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பேசிய அவர், சுமார் 140 மீட்டர் அகலமுள்ள, "நகரங்களை அழிக்கும்" திறன் கொண்ட 15,000 நடுத்தர அளவிலான விண்கற்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.15,000 நடுத்தர அளவிலான
ஆபத்து
பெரிய விண்கற்களை விட நடுத்தர அளவே ஆபத்து
"திரைப்படங்களில் வருவது போன்ற மிகப்பெரிய விண்கற்கள் எங்கே இருக்கின்றன என்பது எங்களுக்கு தெரியும். அதேபோல் மிகச்சிறிய கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும். ஆனால், இந்த நடுத்தர அளவிலான விண்கற்கள் ஒரு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விழுந்தால், ஒரு பெரிய பிராந்தியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. துரதிர்ஷ்டவசமாக, உலகின் மிகச்சிறந்த தொலைநோக்கிகளால் கூட இவற்றை எளிதில் கண்டறிய முடியாது," என்று டாக்டர் கெல்லி ஃபாஸ்ட் கவலை தெரிவித்துள்ளார். நாசாவின் 'டார்ட்' (DART) திட்டத்தை வழிநடத்திய டாக்டர் நான்சி சாபோட் கூறுகையில், "விண்கல்லைத் திசைதிருப்பும் தொழில்நுட்பத்தை டார்ட் மூலம் நிரூபித்தாலும், தற்போது உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதைத் தடுக்கத் தயாராக எந்த விண்கலமும் நம்மிடம் இல்லை. அதற்கான முதலீடுகளும் போதிய அளவில் செய்யப்படவில்லை," என எச்சரித்துள்ளார்.
விவரங்கள்
முக்கியத் தரவுகள்
140 மீட்டருக்கும் அதிகமான அளவுள்ள விண்கற்களில் 40% மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன என கெல்லி ஃபாஸ்ட் கூறுகிறார். கடந்த 2024 கிறிஸ்துமஸ் தினத்தன்று பூமியை கடந்து சென்ற 'YR4' என்ற விண்கல், கால்பந்து மைதானம் அளவு கொண்டது. இது பூமியை கடந்த பின்னரே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளியை நிரப்ப, நாசா அடுத்த ஆண்டு 'Near-Earth Object Surveyor' என்ற புதிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.