இணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன்
கடந்த ஆண்டு 5G-சேவை தொடங்கப்பட்ட போதே, விலை குறைந்த 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தப் புதிய 5G ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கவிருப்பதாக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக ஏற்கனவே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து விலை குறைந்த 4G ஸ்மார்ட்போன் ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது. புதிய 5G ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில், அந்தப் புதிய போன் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். விலை குறைவான போன் என்பதால், பிளாஸ்டிக் பாடியைக் கொண்டிருக்கிறது அந்த 5G ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த புதிய ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவின் 5G ஸ்மார்ட்போன்:
விலை குறைவான 4G ஸ்மார்ட்போனை ஜியோ வெளியிட்ட போதும், மிகவும் திறன் குறைவான ப்ராசஸரையே அந்நிறுவனம் பயன்படுத்தியிருந்தது. மேலும், அந்த ஸ்மார்போனின் மற்ற அம்சங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்தப் புதிய 5G ஸ்மார்ட்போனிலும் அதே போல் மிகவும் திறன் குறைந்த யுனிசாக் 5G அல்லது டைமன்சிட்டி 700 ஆகிய ப்ராசஸர்களையே ஜியோ பயன்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கம் 13MP முதன்மைக் கேமராவுடன் டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 5MP சென்சாரும் ட்விட்டரில் கசிந்த ஜியோ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 5G டேட்டா வசதியுடன் ரூ.10,000-குள்ளான விலையில் இந்த ஸ்மார்ட்போனை ஜியோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.