'வாட்ஸ்அப் நம்பகத்தன்மை இல்லாதது'.. பதிவிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம்?
ட்விட்டர் மென்பொறியாளர் ஒருவர் வாட்ஸ்அப் செயலி குறித்து செய்த டிவீட் ஒன்று தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பதிவில் வாட்ஸ்அப் செயலி அந்தக் குறிப்பிட்ட நபருடைய மொபைலில் மைக்ரோஃபோனை தேவையில்லாத நேரங்களில் பயன்படுத்தியற்கான ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டிருக்கும் அவர், "நான் தூங்கும் நேரத்திலும் பின்னணியில் மைக்ரேஃபோனை உபயோகித்திருக்கிறது வாட்ஸ்அப். என்ன நடக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தப் பதிவைக் குறிப்பிட்டு "வாட்ஸ்அப் நம்பகத்தன்மையானது கிடையாது" என மறுபதிவு செய்திருக்கிறார் டவிட்டர் சிஇஓ எலான் மஸ்க். கடந்த சில மாதங்களாகவே பல ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் மொபைலில் இது போன்ற பிரச்சினை இருப்பதாகப் புகார் எழுப்பி வந்திருக்கின்றனர்.
வாட்ஸ்அப்பின் பதில்:
இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனமும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. அந்தப் பதிவில் கடந்த 24 மணி நேரமாக அவருடன் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்டில் உள்ள கோளாறின் காரணமாகவே இது போன்று நிகழ்ந்திருக்கிறது. கூகுளிடம் இது குறித்து விசாரித்து சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம், எனக் குறிப்பிட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். மேலும், பயனர்களுக்கு தேவைப்படும் போது மட்டுமே வாட்ஸ்அப் மைக்கை பயன்படுத்தும், அதுவும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது வாட்ஸ்அப். அந்த ட்விட்டர் மென்பொறியாளரின் பதிவைக் குறிப்பிட்டு, "இது ஏற்றுக்கொள்ளமுடியாத தனியுரிமை விதமீறல். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிவிட்டிருக்கிறார் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.