குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன்
இந்தியாவில் குவால்காமின் புதிய சிப்பைக் கொண்டு 'ஐகூ 12 5G' (iQoo 12 5G) ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த விவோவின் துணை நிறுவனமான ஐகூ. குவால்காம் நிறுவனமானது தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரை ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் சம்மிட் நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது. அந்த சிப்பே ஐகூ 12 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படவிருக்கிறது. இந்தப் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போனை நவம்பர் 7ம் தேதி சீனாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடவிருக்கிறது. மேலும், இந்தியாவில் குவால்காமின் ஜென் 3 சிப்பைக் கொண்டு வெளியாகவிருக்கும் முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கப் போகிறது ஐகூ 12 5G.
ஐகூ 12 5G: வசதிகள்
இந்தியாவில் புதிய ஐகூ 12 5G ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்பதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறார் ஐகூ இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிபுன் மரியா. ஐகூ 12 ஸ்மார்ட்போனானது 144Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்ட 2K AMOLED டிஸ்பிளேவைக் கொண்டு வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி மற்றும் அல்ட்ராசானிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரையும் ஐகூ 12 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கவிருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருக்கின்றன. மேலும், ஐகூ 12 ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50MP+50MP+64MP என்ற ட்ரிபிள் கேமரா செட்டைப்பை ஐகூ நிறுவனம் வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.