சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல்
நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது சந்திரயான்-3. இதனைத் தொடர்ந்து, தற்போது சந்திரயான்-3யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து லேண்டர் மாடியூலானது வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ. இதன் அடுத்த கட்டமாக நாளை மாலை 4 மணியளவில், லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மேலும் குறைந்த சுற்று வட்டப்பாதையில், நிலவைச் சுற்றிவரவிருக்கிறது லேண்டர் மாடியூல். ஆகஸ்ட் 23-ல் லேண்டர் நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில், ப்ரொபல்ஷன் மாடியூலானது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நிலைவச் சுற்றி வரவிருக்கிறது.