
BSNL வீட்டுக்கே சிம் கார்டு டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது: புதிய இணைப்பு பெறுவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, மொபைல் சேவைகளை நுகர்வோர்களுக்கு எளிமையாக்கும் நோக்கத்தில், வீட்டிற்கே சிம் கார்டு டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பயனர்களுக்கோ அல்லது எளிதில் நெட்வொர்க் மாற்ற விரும்புபவர்களுக்கோ இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Jio, Airtel, Vi ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டு வாசல் சிம் விநியோக சேவையை வழங்கி வருகின்ற நிலையில், BSNL இப்போது அந்த வரிசையில் இணைய முயல்கிறது. இருப்பினும், இந்த சேவை இலவசமாக இருக்குமா அல்லது கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் குறித்து நிறுவனத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்படவில்லை.
செயல்முறை
வீட்டிலேயே புதிய சிம் - எப்படி விண்ணப்பிப்பது?
புதிய சிம் இணைப்பை பெற, பயனர்கள் பிஎஸ்என்எல் -இன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அங்கே பின்வரும் செயல்முறைப்படி புதிய சிம் ஆர்டர் செய்யலாம். புதிய எண் அல்லது எண்ணை போர்ட் செய்யும் விருப்பத்தைக் குறிப்பிட வேண்டும். பின்னர், PIN கோட், முழுப் பெயர், மாற்று மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை உறுதிப்படுத்த, உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை உறுதிப்படுத்தியதும், சுய KYC (Self-KYC) செயல் கட்டாயமாகும். KYC முடிந்ததும், சிம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இந்த புதிய சேவை, BSNL தொடர்ந்து சந்திக்கின்ற சந்தாதாரர் இழப்பை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இச்சேவை, குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.