புகைப்படங்களில் இருந்து ஆடையை நீக்கும் AI கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் அதனால் விளையும் நன்மைகள் மற்றும் பொருளாதார மாற்றும் குறித்து மட்டுமே அதிகம் விவாதிக்கபடும் நேரத்தில், இன்னொரு புறம் சாமானிய மக்களுக்கு (குறிப்பாக பெண்களுக்கு) தீங்கு விளைவிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இணையத்தில் உலா வரத் தொடங்கியிருக்கின்றன. பெண்களின் புகைப்படங்களில் ஆடைகளை நீக்கும் வகையிலான AI கருவிகள் தற்போது ஆன்லைன் பயனாளர்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. இது போன்ற கருவிகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில் ஆடையுடன் இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஆடையில்லாத பகுதியைப் பொருத்தி புதிய புகைப்படம் உருவாக்கப்படுகிறது. போலி என்று சொல்ல முடியாத அளவிற்கு காட்சியளிக்கின்றன இந்தப் புகைப்படங்கள்.
அதிகரித்து வரும் பிரச்சினைக்குறிய AI தொழில்நுட்பம்:
மேற்கூறிய வசதியை வழங்கும் கருவிகள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இது போன்ற தளங்களை 2 கோடியே 40 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். மேலும், சமூக வலைப்பின்னல்கள் மூலமாகவே இத்தகைய தளங்களின் இருப்பு பிறருக்கு தெரிய வருகிறது. அந்த வகையில், இது போன்ற தளங்களுக்கான இணைப்புகளின் பகிர்வு 2400% அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு. இது போன்ற தளங்களில் பெரும்பாலானவை பெண்களை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. மேலும், சில தளங்கள் இது போன்ற வசதிகளை வழங்குவதற்காக கட்டணமும் வசூலிக்கின்றன. இதில் வருத்தத்திற்குரிய விஷயம், கட்டணம் செலுத்தியும் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தினசரி அத்தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தான்.
எளிதில் கிடைக்கும் தொழில்நுட்பம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போலியான புகைப்படங்களை உருவாக்குவது என்பது எல்லோராலும் செய்ய முடிகிற செயல் அல்ல. மேலும், உண்மைத்தன்மையுடன் கூடிய மேற்கூறிய வகையிலான புகைப்படங்களை தேர்ந்த நபர்களால் மட்டுமே செய்ய முடியும். ஆனால், மேற்கூறிய வகையிலான வசதியை வழங்கும் தளங்கள், பொதுப் பயன்பாட்டிற்கு அதனைக் கொண்டு வந்திருப்பது தான் அச்சம் தரும் விஷயம். யாரேனும் ஒருவருடைய புகைப்படம் மட்டும் இருந்தால் போது, அதனை ஒரே ஒரு சொடுக்கில் ஆடையற்ற புகைப்படமாக மாற்ற முடியும் என்பது எவ்வளவு ஆபத்தான விஷயம். அதுவும் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் புரலும் இந்தக் காலக்கட்டத்தில் அது மிக மிக ஆபத்தான ஒரு விஷயம்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் நிலைப்பாடு:
இது போன்ற தளங்களின் பரவல் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் பரவலைத் தடுப்பதில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மிக மிக அதிகம். டிக்டாக் மற்றும் மெட்டா உள்ளிட்ட சில சமூல வலைத்தளங்கள், தங்களுடைய தளங்களில் மேற்கூறிய பிரச்சினைக்குரிய சேவைகள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பான முக்கிய வார்த்தைகளின் பயன்பாட்டைத் தடை செய்திருக்கின்றன. உதாரணத்திற்கு 'Undress' என்ற வார்த்தையைத் தான் மேற்கூறிய சேவை மற்றும் உள்ளடக்கங்களைக் கண்டறிய பயனர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனவே, அந்த வார்த்தையின் பயன்பாட்டைத் தடை செய்திருக்கின்றன. கூகுளும் இது போன்ற சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.