ஆபத்தான அல்காரிதம்? தனது மகளுக்கு யூடியூப் பயன்படுத்த தடை விதித்த ஆந்த்ரோபிக் இணை நிறுவனர்
செய்தி முன்னோட்டம்
பிரபலமான கிளாட் ஏஐ சாட்போட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், தனது சிறு வயது மகளுக்கு யூடியூப் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். யூடியூபின் அல்காரிதம் செயல்படும் விதம் தனக்கு மிகுந்த அச்சத்தை அளிப்பதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தொழில்நுட்பம், அவர்களைத் தவறான பாதையில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக அவர் கருதுகிறார்.
கட்டுப்பாடுகள்
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் கட்டுப்பாடுகள்
ஜாக் கிளார்க் மட்டுமல்லாமல், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்கள் மற்றும் வீடியோ தளங்களைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். யூடியூப் சிஇஓ நீல் மோகன் தனது குழந்தைகளுக்குச் சமூக வலைதளப் பயன்பாட்டை இவர் கட்டுப்படுத்தியுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது பிள்ளைகள் 14 வயதை எட்டும் வரை அவர்களுக்கு செல்போன் வாங்கித் தரவில்லை. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது குழந்தைகள் ஐபேட் பயன்படுத்துவதை அவர் அனுமதித்ததே இல்லை. பேபால் நிறுவனத்தின் பீட்டர் தியேல் வாரத்திற்கு வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே தனது குழந்தைகளுக்குத் டிஜிட்டல் திரை நேரத்தை ஒதுக்குகிறார்.
காரணம்
ஏன் இந்தத் தடை?
யூடியூப் போன்ற தளங்களில் ஒரு வீடியோவைப் பார்த்த பிறகு, அடுத்தடுத்து தானாகவே வரும் பரிந்துரைகள் குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. ஜாக் கிளார்க் தனது மகள் புளூயி போன்ற தரமான நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதித்தாலும், அல்காரிதம் காட்டும் கட்டுப்பாடற்ற வீடியோக்களைப் பார்க்க அனுமதிப்பதில்லை. "தொழில்நுட்பத் துறையில் இருக்கும் பல கலிபோர்னியா அதிகாரிகளைப் போலவே, நானும் என் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தை ஒரு எல்லைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு
தொழில்நுட்பம் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதை ஒப்புக்கொண்ட ஜாக் கிளார்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளங்களிலும் பெற்றோருக்கான கட்டுப்பாடுகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது ஆந்த்ரோபிக் தளம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள் இதைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதால், அவர்கள் அதிக நேரத்தை இதில் செலவிடுவதைத் தடுக்கப் புதிய பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.