Page Loader
இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்
இந்திய நிறுவனங்கள் மீது அதிகரித்த சைபர் தாக்குதல்கள்

இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 19, 2023
11:19 am

செய்தி முன்னோட்டம்

2022-ல் இந்திய நிறுவனங்கள் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர்ஆர்க் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம். 2022-ல் 91% இந்திய நிறுவனங்கள் ரேண்ஸம்வேர் என்ற வகை சைபர் தாக்குதலைச் சந்தித்திருப்பதாகவும், அதில் 55% நிறுவனங்கள் அந்த சைபர் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக இரண்டு மடங்குக்கும் அதிகமாக பணத்தை செலவழித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பிற்கு முறையாக செலவு செய்யாததே இதற்குக் காரணம் எனவும் அந்த அறிக்கையில் சைபர்ஆர்க் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. சைபர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் கட்டமைப்பை பலமாக வைத்திருப்பது அவசியம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதற்கு செலவு செய்யும் தொகையை நிறுவனங்கள் குறைத்திருக்கின்றன.

சைபர் தாக்குதல்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய சைபர் தாக்குதல்: 

சைபர் பாதுகாப்பிற்கான முதலீட்டைக் குறைத்ததையடுத்து, சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதகாக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது நிலவி வரும், பொருளாதார சூழ்நிலை, பணியாளர்கள் பணியிழப்பு ஆகியவை சைபர் பாதுகாப்பிற்கான முதலீட்டை மேலும் குறைக்கவே வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 61% நிறுவனங்கள் இந்த ஆண்டு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பதகாத் தெரிவித்திருக்கின்றனர். 92% தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது மென்பொருள் விநியோகச் சங்கிலியில் நடத்தப்படும் மால்வேர் தாக்குதலே தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.