Loading...
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏன் வருகிறது? மருத்துவர் விவரிக்கும் மறைமுக அபாயங்கள்
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்.

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏன் வருகிறது? மருத்துவர் விவரிக்கும் மறைமுக அபாயங்கள்

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
06:38 pm

செய்தி முன்னோட்டம்

உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகக் காணப்படும் நபர்களுக்கும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பு போன்றவை எந்த அறிகுறிகளும் இன்றி ரத்த நாளங்களைச் சேதப்படுத்துவதே இதற்கு முக்கியக் காரணம் என மெதாந்தா மருத்துவமனையின் இதயவியல் தலைவர் டாக்டர் பிரவீன் சந்திரா தெரிவித்துள்ளார். மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன. எனவே, வழக்கமான பரிசோதனைகள், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் மனஅழுத்த மேலாண்மை மூலம் இதய அடைப்பைத் தவிர்க்கலாம்.

மரபியல் நோய்கள்

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்

வெளிப்புறத் தோற்றத்திற்கு ஆரோக்கியமாக இருந்தாலும், ரத்த நாளங்களில் ஏற்படும் மெதுவான பாதிப்புகள் மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன. அறிகுறிகளற்ற உயர் ரத்த அழுத்தம் இதயத்தில் தொடர் அழுத்தத்தை உருவாக்குகிறது.

அதேபோல, கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு ரத்த நாளங்களைச் சேதப்படுத்துவதுடன், கெட்ட கொழுப்பு ரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், குடும்பத்தில் முந்தைய தலைமுறையினருக்கு இதய நோய் பின்னணி இருந்தால், சீரான உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் தொடரவே செய்கிறது.

பழக்கவழக்கங்கள்

பரிசோதனைகளின் அவசியம்

முறையான உடற்பயிற்சி செய்தாலும் புகைபிடித்தல், அதிக மதுப்பழக்கம், தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான மனஅழுத்தம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.

இதனால், ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பரிசோதனை செய்யாமல், ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே இவற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

ADVERTISEMENT

உடனடி மருத்துவ உதவி

தடுப்பு முறைகள் மற்றும் அவசர சிகிச்சை

பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரையைக் குறைக்க வேண்டும். யோகா மற்றும் தியானம் மூலம் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் TAVI போன்ற நவீன சிகிச்சைகள் வந்துவிட்ட போதிலும், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், அதிக வேர்வை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தங்க மணிநேரத்திற்குள் (Golden Hour) மருத்துவமனையை அடைவது உயிரைக் காக்கும்.

ADVERTISEMENT