இனிப்பே சாப்பிடல, ஆனா சுகர் அதிகமாகுதா? ரத்த சர்க்கரை உயர உணவு மட்டுமே காரணமல்ல; திடுக்கிடும் உண்மைகள்
செய்தி முன்னோட்டம்
இனிப்பு உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கும் நபர்களுக்கும், சில நேரங்களில் உணவே எடுத்துக்கொள்ளாத விரத நேரங்களிலும் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயருவதுண்டு. உணவில் சர்க்கரையை சேர்க்காத போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க கல்லீரல் தானாகவே குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் செலுத்துகிறது. இதனால், நாம் சாப்பிடும் உணவைத் தாண்டி ஹார்மோன்கள், மன அழுத்தம், உடல்நலக்குறைவு மற்றும் நீரிழப்பு போன்ற பல காரணங்கள் ரத்த சர்க்கரை அளவைத் தீர்மானிக்கின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹார்மோன் மாற்றங்கள்
விடியற்காலை நேர ஹார்மோன் மாற்றங்கள்
காலையில் எழுந்தவுடன் இனிப்பு எதுவும் சாப்பிடாமலேயே ரத்த சர்க்கரை அளவு உயர்வாகக் காணப்படுவதற்கு டான் ஃபினாமினன் என்ற இயற்கை நிகழ்வே முதன்மைக் காரணமாகும்.
அதிகாலை நேரத்தில் உடல் விழித்தெழுவதற்கு உதவும் கார்டிசோல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.
இந்த ஹார்மோன்கள் கல்லீரலைத் தூண்டி குளுக்கோஸை ரத்தத்தில் வெளியிடச் செய்கின்றன.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்நேரத்தில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதால், காலையில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டுகிறது.
தாக்கம்
மன அழுத்தம் மற்றும் நோய்த்தொற்றுகளின் தாக்கம்
அதிகப்படியான மன அழுத்தம், பயம் மற்றும் கவலை ஏற்படும் போது உடலின் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்துகின்றன.
அதேபோல், காய்ச்சல், இருமல், சளி அல்லது உடம்பில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் போது, அதை எதிர்த்துப் போராட உடல் வெளியிடும் அழற்சி ஹார்மோன்கள் இன்சுலின் செயல்பாட்டைத் தற்காலிகமாகப் பலவீனப்படுத்துகின்றன.
இதனால், வழக்கத்தை விடக் குறைவாக உணவருந்தினாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று உயர்ந்துவிடும்.
உடற்பயிற்சி
தீவிர உடற்பயிற்சி, நீரிழப்பு மற்றும் மாத்திரைகள்
கடுமையான எடைத்தூக்கும் பயிற்சிகள் மற்றும் ஓட்டப்பயிற்சிகளின் போது அட்ரினலின் ஹார்மோன் சுரப்பால் ரத்த சர்க்கரை தற்காலிகமாக உயரக்கூடும்.
மேலும், உடலில் நீர்ச்சத்து குறையும் போது ரத்தத்தில் குளுக்கோஸின் அடர்த்தி அதிகரித்து சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டும்.
இதுதவிர, ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொள்வதும், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ரத்த சர்க்கரை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
எனவே, சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.