காரமான உணவுகள் உட்கொள்வது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
இந்திய உணவுகள் பெரும்பாலும் மசாலாக்களை, காரமும் நிறைந்ததாகவே இருக்கும். நாட்டில் உள்ள பல்வேறு பிராந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. இந்த காரத்திற்காக சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி சுவையை கூட்டுவது வழக்கம். வீட்டிற்கு வீடு காரத்தின் அளவுகள் மாறுபடும். ஒவ்வொருவரின் நாவின் சுவைக்கேற்ப இந்த காரத்தின் அளவு சமையலில் மாறுபடும். சரி, இந்த காரம், உடலுக்கு நல்லதா? கெட்டதா? உண்மையில், காரம் அதிகம் இருக்கும் உணவுகளை தொடர்ந்து எப்போதாவது சாப்பிடுவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி அல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் நிச்சயம் உபாதைகள் ஏற்படும். அவை எப்படி எல்லாம் உடலை பாதிக்கும் மற்றும் அதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்.
காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதினால் நம் உடலில் மாற்றங்கள் என்ன?
காரம் அதிகமாக இருக்கும் உணவுகள் அதிகம் உட்கொள்ளும்போது, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவுகுழாய்கள் உங்களுக்கு உணர்த்தும் முதல் அறிகுறி அது. அதனை தொடர்ந்து, வயிற்று புண்கள் உண்டாகக்கூடும். அதிகப்படியான காரத்தை உணவுகளில் சேர்ப்பதினால் செரிமான பிரச்சினை ஏற்படுகிறது. இரைப்பை மற்றும் குடலில் பிரச்னைகள் ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதுவும் ஒரு அறிகுறி. நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றத்தை தொடர்ந்து தொண்டைப்புண் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. அதையும் மீறி, கார உணவுகள் உட்கொள்ளும் போது, அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், காரமான உணவுகளை சாப்பிடும்போது நம் உடலிலுள்ள வெட்பநிலை அதிகமாகிறது. இதனால் வியர்வை அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை உண்டாக்கி முகத்தில் முகப்பருக்கள் தோன்றலாம்.