Page Loader
EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!
EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 16, 2023
02:14 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). பணியாளர்கள் மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களிடம் இருந்து பணியாளர்களுக்காக பெறப்படும் மாதாந்திர தொகையை இந்த நிறுவனமே நிர்வகிக்கிறது. EPFO-வின் முதன்மையான பணியே தொழிலாளர் ஒய்வூதிய திட்டம் மற்றும் பணியாளர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை நிர்வகிப்பது அதனை ஒழுங்குபடுத்துவதுமே. இந்த் திட்டங்கள் பணியாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பையும், ஓய்வுதியப் பலன்களையும் அளிக்கிறது. பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டுமே குறிப்பிட்ட பணியாளரின் EPFO கணக்கில் பங்களிப்பைச் செலுத்தவேண்டும். இது தற்போது பணியாளரின் அடிப்படை சம்பளத்திலிருந்து 12%-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

EPFO

EPFO-வின் பயன்கள்: 

பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை பிடித்தம் செய்வதன் மூலம் நீண்ட கால சேமிப்புக்கு வழிவகை செய்கிறது EPFO. இதன் மூலம் தன் பணிக்காலத்திற்குப் பிறகும் பணியாளர்களின் பணத்தேவை ஓரளவுக்குப் பூர்த்தியாகிறது. பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து EPF திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணத்தை அரசு பங்குகள், பத்திரங்கள் மற்றும் இதர முதலீட்டு வகைகளின் மூலம் முதலீடு செய்கிறது EPFO. இதன் மூலம் கிடைக்கும் பணத்தையே ஓய்வுக்குப் பிறகு வட்டியுடன் பிரித்துக் கொடுக்கிறது அந்த அமைப்பு. EPF திட்டம் குறித்த பல்வேறு சேவைகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும், EPFO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம். EPF திட்டத்தின் கொள்கைகளும் செயல்முறைகளும் அவ்வப்போது மாறுபடும். அதனையும் அத்தளத்தின் அரசின் சுற்றறிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.