கோடை வெயிலில் இருந்து தப்பிக்க காலையில் இருந்து இரவு வரை சாப்பிட வேண்டிய உணவுகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் நடப்பு 2026 கோடைகாலத்தில் வெப்ப அலை மற்றும் வெயிலின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. இத்தகைய கடுமையான வெப்ப சூழலில், நமது உடலில் இருந்து அதிகப்படியான நீர்ச்சத்தும், மின்பகுளிகளும் வியர்வை வழியாக வெளியேறி விடுகின்றன. இதனால் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் உயிருக்கே ஆபத்தான வெப்பவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான நீர்ச்சத்து மேலாண்மை என்பது வெறும் தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, நாள் முழுவதும் சரியான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உடலின் நீர் சமநிலையைப் பேணுவதாகும். கோடை வெயிலில் இருந்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க, காலை முதல் இரவு வரை நாம் பின்பற்ற வேண்டிய உணவு முறை இதோ:
டயட்
காலை பொழுது நீர்ச்சத்தை கூட்டுங்கள்
இரவு தூங்கி எழுந்திருக்கும் போது நமது உடல் லேசான நீர் வறட்சியுடன் இருக்கும். எனவே, காலைப் பொழுதை இவற்றுடன் தொடங்குவது நல்லது. இதனால், தேங்காய்த் தண்ணீர் (இளநீர்), எலுமிச்சை சாறு அல்லது சாதாரண குடிநீருடன் நாளை தொடங்குங்கள். ஆனால் காலையிலேயே சர்க்கரை அதிகம் உள்ள செயற்கைப் பானங்களைக் குடிப்பதைத் தவிர்க்கவும், இது பின்னாளில் நீர் வறட்சியை அதிகமாக்கும். நாம் உண்ணும் உணவின் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது. காலை உணவில், தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்சு மற்றும் பெர்ரி பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து, காலை உணவோடு லஸ்ஸி அல்லது மோர் குடிப்பது உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும்.
மதிய நேரம்
எலக்ட்ரோலைட்டுகளில் கவனம் செலுத்துங்கள்
நண்பகல் மற்றும் மதிய வேளையில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வியர்வை மூலம் உடலின் உப்பின் அளவு குறையும். அதனால், மோர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேவைப்பட்டால் ஓஆர்எஸ் கரைசல் பருகவும். உடல் பலவீனம், தலைச்சுற்றல், வேகமான இதயத் துடிப்பு அல்லது அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடல் கடுமையான நீரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் காபி, டீ, சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட எனர்ஜி டிரிங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக இளநீர், பழங்கள் கலந்த நீர் (Infused water), பழச்சாறுகள் (Smoothies), சூப் அல்லது மூலிகை பானங்கள் குடிக்கலாம்.
இரவு
இரவு தூங்குவதற்கு முன்
கோடை இரவுகளில் காற்றிட்டமில்லாத அறைகளில் தூங்கும் போது இரவு நேரத்திலும் நீரிழப்பு ஏற்படும். எனவே, தூங்குவதற்குச் சற்று முன்பு ஒரு சிறிய கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது (அதிகமாகக் குடித்தால் தூக்கம் கெடும்). இரவு உணவில் தயிர் அல்லது பழங்களைச் சேர்த்துக் கொள்வது இரவு நேர உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும். முதியவர்கள், சிறிய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வெளியில் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இந்த வெயில் காலத்தில் தாகம் எடுக்கும் முன்பே குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.