
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
முதியோருக்கு சுகாதார வசதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் (PM-JAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தி உள்ளது.
இதன்படி, ஆயுஷ்மான் செயலி மூலம் வய வந்தனா அட்டையை வழங்க தொடங்கியுள்ளது.
இந்த அட்டை, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது.
இந்த முயற்சி இந்தியாவின் வயதான மக்களுக்கு பணமில்லா சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் PM-JAY, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்கிறது.
எப்படி பதிவு செய்வது
செயலியில் எப்படி பதிவு செய்வது?
ஆயுஷ்மான் மொபைல் ஆப்பில் பதிவு செய்ய, பயனர்கள் ஆயுஷ்மான் செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
பின்னர் ஆதார் மற்றும் இருப்பிட விவரங்களை வழங்க வேண்டும், தேவைப்பட்டால் இ-கேஒய்சியை நிரப்ப வேண்டும்.
சரிபார்க்கப்பட்டவுடன், அட்டையை நேரடியாக செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், வயதுத் தகுதியை நிர்ணயிப்பதற்கு ஆதாரில் உள்ள ஆண்டின் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதியாக பரிசீலிக்கப்படும்.
இந்த அட்டை மூலம் டயாலிசிஸ், பிடிசிஏ போன்ற இதய நடைமுறைகள் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்துதல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சை, பக்கவாத பராமரிப்பு மற்றும் பல போன்ற முக்கிய சிகிச்சைகளை உள்ளடக்கியது.