எழுந்தவுடனே போன் பாக்குறீங்களா? எச்சரிக்கும் டிஜிட்டல் டிடாக்ஸ் நிபுணர்கள்! காலையிலேயே மூளையில் நடக்கும் விபரீதம்
செய்தி முன்னோட்டம்
முன்பெல்லாம் மனிதர்களின் காலை பொழுதுகள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் தொடங்கின. ஆனால் தற்பொழுது படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பே கைகளில் மொபைல் போன்கள் வந்துவிடுகின்றன. வாட்ஸ்அப் மெசேஜ்கள், இன்ஸ்டாகிராம் நோட்டிபிகேஷன்கள் மற்றும் மின்னஞ்சல்களைச் சரிபார்ப்பது பலருக்கும் ஒரு காலை கடமையாகவே மாறிவிட்டது. தற்பொழுது 'காலை 6 மணி போன் விதி' என்று அழைக்கப்படும் இந்த ஆபத்தான பழக்கம், மனிதர்களின் அன்றாட மனநிலையைச் சத்தமில்லாமல் மாற்றி வருகிறது. இது காலையிலேயே மனித மூளையை ஒருவித சோர்வு நிலைக்குத் தள்ளுவதாக டிஜிட்டல் நல்வாழ்வு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடக்கத்திலேயே மாறும் சிந்தனைப் போக்கு
உற்பத்தித்திறன் என்ற பெயரில் ஏமாறும் மூளை
காலையில் எழுந்த உடனே செய்திகளைத் தெரிந்து கொள்வதும், மெசேஜ்களுக்குப் பதிலளிப்பதும் ஒரு சிறந்த உற்பத்தித்திறன் போலத் தோன்றலாம். ஆனால் நமது மனித மூளை இதனை முற்றிலும் வேறு விதமாகப் புரிந்துகொள்கிறது. தூங்கி எழுந்த முதல் ஒரு மணி நேரம் ஒரு நாளின் ஒட்டுமொத்த மனநிலையைத் தீர்மானிக்கிறது. அந்தத் தொடக்க நேரத்திலேயே திரைகளைப் பார்க்கும்போது, மூளை தங்களின் சுய சிந்தனையை இழக்கிறது. இதனால் மூளை அமைதியான நிலையில் இருந்து மாறி, வெளிப்பபுறத் தூண்டுதல்களுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும் ஒரு பதற்றமான நிலைக்குச் சென்றுவிடுகிறது.
உடலின் இயற்கை சிக்னல்கள் முடக்கம்
சத்தமில்லாமல் உருவாகும் மனச்சோர்வு மற்றும் பதற்றம்
இந்தத் தவறான பழக்கத்தின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. ஆனால் அவை நாளுக்கு நாள் மனித மனதிற்குள் ரகசியமாகப் பெரிய பாதிப்புகளை உருவாக்குகின்றன. படுக்கையை விட்டு வெளியே வருவதற்கு முன்பே ஒருவித அவசரமும், அழுத்தமும் மனித மனதிற்குள் குடியேறிவிடுகிறது. காலப்போக்கில் இந்தத் தொடர் பழக்கம் கடுமையான மனச்சோர்வு, கவனக்குறைவு, சட்டென்று கோபப்படுதல் மற்றும் தேவையற்ற பதற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த இக்கட்டான நிலையில், தூக்கம், உடற்பயிற்சி மற்றும் காலை நேர இயற்கை தேவைகள் போன்ற உடலின் அடிப்படை சிக்னல்களை மூளை முற்றிலும் புறக்கணிக்கத் தொடங்குகிறது.
கால நேரத்தின் முக்கியத்துவம்
மனநல ஆலோசகர்களின் மாறுபட்ட கருத்துகளும் கால நேரத்தின் முக்கியத்துவமும்
இந்த காலை நேரப் பழக்கம் குறித்து மனநல ஆலோசகர்கள் மத்தியில் சில மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. காலையிலேயே போனை பார்ப்பது தங்களை உலகத்தோடு இணைப்பில் வைத்திருக்க உதவுவதாகச் சில சிகிச்சையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதன் கால நேரத்தைக் குறித்து மிகுந்த கவலை கொள்கின்றனர். இங்குப் பிரச்சனை மொபைல் போன் அல்ல, அதனை நாம் பயன்படுத்தும் தவறான காலை நேரம் தான் முக்கியக் காரணியாகும். ஏனெனில் ஒருமுறை உங்களின் மூளை வெளிப்புற விஷயங்களுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு உங்களின் மனதை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாகிவிடும்.
அமைதிக்கான காலை பொழுதுகள்
டிஜிட்டல் ஸ்கிரீன் அற்ற காலை நேரத்தை உருவாக்குவது எப்படி?
பாரம்பரியமாகவே காலை பொழுதுகள் என்பது தியானம், உடற்பயிற்சி அல்லது சத்தமில்லாமல் அமைதியாக அமர்வதற்காகவே வடிவமைக்கப்பட்டன. உலகம் நமக்குள்ளே நுழைவதற்கு முன்பு, நமது மனதிற்கு ஒரு சிறிய இடைவெளியைக் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். உங்களின் காலை பொழுது உங்களுடைய சுய சிந்தனையால் வழிநடத்தப்பட வேண்டுமா அல்லது வெளிப்புற சமூக வலைத்தளங்களால் இயக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கு ஒரு எளிய தீர்வாக, காலையில் எழுந்தவுடன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மொபைல் போன் பயன்படுத்துவதைத் தள்ளி வைக்கலாம். இந்த சிறிய மாற்றம் உங்களின் ஒட்டுமொத்த நாளையும் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.