LOADING...
அலுவலக டிபனுக்கு ஏற்ற 6 சத்தான, சுவையான உணவுகள்: செய்முறை இதோ!
அலுவலக டிபனுக்கு ஏற்ற சத்தான உணவுகள்

அலுவலக டிபனுக்கு ஏற்ற 6 சத்தான, சுவையான உணவுகள்: செய்முறை இதோ!

எழுதியவர் Vasuki
May 17, 2026
06:33 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. பணிச்சுமை மற்றும் நேரமின்மை காரணமாகப் பலரால் வீட்டில் சமைக்க முடிவதில்லை. இதனால், உணவகங்களில் சாப்பிடுவது அல்லது வெளியில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இது நீண்ட கால அடிப்படையில் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல. நீங்களும் இதே போன்ற சூழலில், தினமும் ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டுச் சலிப்படைந்தவர் எனில், உங்களுக்கு உதவக்கூடிய, அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்ற 6 சத்தான மற்றும் சுவையான உணவுகளின் எளிய செய்முறைகளை இனி விரிவாகக் காண்போம் வாருங்கள்.

#1

பாலக் பனீர் பராத்தா

பாலக் கீரையை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் நறுக்கிய பாலக், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த பாலக் கலவை, உதிர்த்த பனீர், சிறிது மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். பிசைந்த கோதுமை மாவில் இந்த பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, பராத்தாவாகத் தேய்த்துக் கொள்ளுங்கள். தோசைக் கல்லில் பராத்தாவைப் போட்டு, நெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுத்தால் சுவையான பாலக் பனீர் பராத்தா தயார்.

#2

ரவை உப்புமா

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துத் தளித்து வதக்குங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பட்டாணி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஊற்றிக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் ரவையைச் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கட்டியாகாதவாறு தொடர்ந்து கிளறுங்கள். நீர் வற்றி உப்புமா பதம் வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.

Advertisement

#3

காராமணி டிக்கி

ஒரு கிண்ணத்தில் வேகவைத்த காராமணி, வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி விழுது, சாட் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையைச் சிறிய வட்ட வடிவ டிக்கிகளாக (தட்டைகளாக) தட்டித் தயார் செய்து கொள்ளுங்கள். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி, செய்து வைத்துள்ள டிக்கிகளைப் போட்டு மிதமான தீயில் வேகவிடுங்கள். இருபுறமும் நல்ல பொன்னிறமாக வரும் வரை திருப்பிப் போட்டுச் சுட்டெடுத்தால், சுவையான காராமணி டிக்கி தயார்.

Advertisement

#4

ஸ்டஃப்டு பர்வரல் சப்ஜி

பர்வரல் (கோவைக்காய் போன்ற வடஇந்திய காய்) காய்களைக் கழுவி, நடுவில் நீளமாக வெட்டி, அதனுள்ளே இருக்கும் விதைகளையும் சதையையும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் போடுங்கள். இந்தக் கிண்ணத்தில் கடலை மாவு, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா கலவையைத் தயார் செய்யுங்கள். இப்போது, இந்த மசாலா கலவையை பர்வரல் காய்களுக்குள் நன்றாக நிரப்புங்கள் (ஸ்டஃப்பிங்). ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இந்த காய்களை வைத்து மூடி, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்து சுருண்டு வரும் வரை சமைத்து இறக்கினால் ஸ்டஃப்டு பர்வரல் சப்ஜி தயார்.

#5

அரிசி கிச்சடி

ஒரு பிரஷர் குக்கரைச் சூடாக்கி, அதில் சிறிது நெய் ஊற்றிப் பாசிப்பயறைப் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அதனுடன் கழுவிய அரிசி, பொடியாக நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி, சில விசில் வரும் வரை வேகவிடுங்கள். இப்போது, ஒரு கடாயில் நெய் சூடாக்கி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுது சேர்த்துத் தாளித்துக் கொள்ளுங்கள். குக்கர் பிரஷர் அடங்கியதும், இந்தத் தாளிப்பை வெந்த கிச்சடியுடன் சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.

#6

தயிர் உருளைக்கிழங்கு (தஹி ஆலு)

வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் தூள் (மாங்காய்த் தூள்), கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு லேசாக வதக்குங்கள். தீயைக் குறைத்து, தயிர் கலவையை இதனுடன் சேர்த்து அடிபிடிக்காமல் சில நிமிடங்கள் கிளறிச் சமைக்கவும். மசாலா கெட்டியானதும் இறக்கிச் சூடாகப் பரிமாறுங்கள்.

Advertisement