அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்தும் நோக்கில் மூன்று புதிய மசோதாக்கள் தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 106-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்(2023)-ன் விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. சட்டம் அமலுக்கு வந்தாலும், தற்போதைய மக்களவை அல்லது சட்டமன்றங்களில் இதை உடனடியாக அமல்படுத்த முடியாது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை பணிகளுக்குப் பின்னரே பெண்களுக்கு 33% இடங்கள் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Centre brings into force the 2023 women’s reservation law with effect from April 16,2026. pic.twitter.com/pywfrc5rts
— Live Law (@LiveLawIndia) April 17, 2026
இடஒதுக்கீடு
2029-ல் இடஒதுக்கீடு: அரசின் புதிய நகர்வு
2023-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த இடஒதுக்கீடு 2034-ல் தான் அமலுக்கு வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இதை முன்கூட்டியே 2029 தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு மூன்று புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது. 1. 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2026: இது லோக்சபா இடங்களை 850 ஆக உயர்த்த வழிவகை செய்கிறது. 2. தொகுதி மறுவரையறை மசோதா, 2026: புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான ஆணையத்தை அமைத்தல். 3. யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2026: டெல்லி, புதுச்சேரி போன்ற சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களில் மாற்றங்களைக் கொண்டு வருதல்.
நாடாளுமன்ற மோதல்
ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சிகள்: நாடாளுமன்ற மோதல்
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் NDA மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. ஆளுங்கட்சி வாதம்: "இந்தியப் பெண்கள் பல தசாப்தங்களாக இந்த இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள். 2029-ல் இதை அமல்படுத்துவது அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நீதி," என்று அரசுத் தரப்பு வாதிடுகிறது. எதிர்க்கட்சி வாதம்: மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக, மக்கள் தொகையைக் குறைத்த தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளதாக அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.