
பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
செய்தி முன்னோட்டம்
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா தாக்கல் செய்த மன்னிப்புக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.
தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, ஆகஸ்ட்-23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன் பிறகு, தவறான தகவல்களைக் பரப்பும் அனைத்து மருந்துவ விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றத்திடம் மீண்டும்மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்
இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கவில்லை.
அதனால், அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால்கிருஷ்ணா ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மன்னிப்பு கோரியிருந்தனர்.
ஆனால், அந்த மன்னிப்பை ஏற்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.