LOADING...
காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு
காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உ.பி அரசு உத்தரவு

காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2025
05:30 pm

செய்தி முன்னோட்டம்

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையெடுக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, காவல்துறையின் பதிவேடுகள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து சாதி தொடர்பான அனைத்து குறிப்புகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பதிலளிக்கும் வகையில், தலைமைச் செயலாளர் தீபக் குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். புதிய உத்தரவின்படி, முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் கைது குறிப்பாணைகள் (arrest memos) போன்ற காவல் துறை ஆவணங்களில் ஒரு நபரின் சாதியைக் குறிப்பிடுவதை அனைத்து அரசுத் துறைகளும் நிறுத்த வேண்டும். மேலும், காவல் நிலைய அறிவிப்புப் பலகைகள் மற்றும் பெயர் பலகைகளில் உள்ள சாதி சார்ந்த குறிப்புகளையும் நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடையாளம்

அடையாளத்திற்கு பெற்றோர் பெயரை பயன்படுத்த உத்தரவு

அடையாளத்திற்காக ஒரு நபரின் பெற்றோரின் பெயர்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை திறம்பட செயல்படுத்த, அரசு தற்போதுள்ள காவல்துறை கையேடுகள் மற்றும் நடைமுறைகளை மாற்றியமைக்க உள்ளது. இந்த உத்தரவு, அலகாபாத் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 16 அன்று பிறப்பித்த கடுமையான உத்தரவுக்குப் பிறகு வந்துள்ளது. நீதிமன்றம் இந்த நடைமுறையை சட்டப் பிழை என்று விவரித்ததுடன், இது அரசியலமைப்பு ஒழுக்கத்தை பாதிக்கிறது என்றும், அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டது. புதிய விதி பரவலாகப் பொருந்தும் என்றாலும், ஒரு முக்கியமான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் மட்டும் சாதி குறிப்பிடப்படும்.