பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
பெங்களூர் கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தியான் என்பது மும்பை-பெங்களூர் ரயில் பாதையில் ஓடும் ஒரு அதிவிரைவு ரயிலாகும். இன்று அதிகாலை 5:45 மணியளவில் இந்த ரயில் பெங்களூரை வந்தடைந்த நிலையில், 7:30 மணியளவில் பி1 மற்றும் பி2 ஆகிய பெட்டிகளில் இருந்து திடீரென புகை வர தொடங்கியது. இதை கவனித்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு, ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணிநேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து ஏற்படும் போது பயணிகள் யாரும் ரயிலில் இல்லை என்பதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.