பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த 4 வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த இரு தமிழர்களின் பெயர்கள் கமலேஷ் (24) மற்றும் யோகேஷ் குமார்(24) ஆகும். கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஒரு நெசவு தொழிலாளி என்று கூறப்படுகிறது. பி.ஏ. பொருளாதாரம் படித்த முடித்தவுடன் கமலேஷ் ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த மாதம் தன் குடும்பத்தினரை பார்க்க கமலேஷ் தமிழகம் வந்துவிட்டு திரும்பி இருக்கிறார். யோகேஷ் குமாரை பற்றிய தகவல்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
வெளி ஆட்கள் உள்ளே வந்திருக்க வாய்ப்பில்லை: ராணுவம்
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று அதிகாலை திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் கேட்டு விரைந்து சென்ற அதிகாரிகள், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் 4 வீரர்களை கண்டனர். முழு பாதுகாப்புடன் இருந்த இராணுவ நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பதால், இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சம்பவம் நடக்கும் போது, இராணுவ நிலையத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டிருந்தால், இது உள் ஆட்கள் செய்த வேலையாக தான் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தை ராணுவ அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்ததும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.