வங்கக்கடலில் உருவாகும் மாற்றம்; பிப்ரவரி 20 முதல் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (பிப்ரவரி 17 வாக்கில்) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு
மழை மற்றும் பனிமூட்டம் குறித்த முன்னறிவிப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலும், உடனடியாக மழை பெய்ய வாய்ப்பில்லை. பிப்ரவரி 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 16 முதல் 20 வரை வட தமிழக மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்) அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள்
சென்னை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்ஸியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்ஸியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். பிப்ரவரி 19 ஆம் தேதி மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே, பிப்ரவரி 15 முதல் 19 வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சில இடங்களில் இயல்பை விட 2° செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.